ஆரிப் முகமது கான் 10 நாட்களுக்குள் உங்களைக் கொலை செய்துவிடுவோம்: ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
அரசியல்

10 நாட்களுக்குள் உங்களைக் கொலை செய்துவிடுவோம்: ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

காமதேனு

கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் ஆரிப் முகமதுகான் ஆளுநராக உள்ளார். தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான ஆரிப் முகமதுகான் பல்வேறு தருணங்களில் கேரள இடதுசாரி அரசின் கருத்தியலோடு முரண்படுகிறார். இதேபோல் மக்கள் மத்தியிலும் இவருக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு வகையான கருத்துகளும் நிலவுகிறது.

இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு, ‘இன்னும் பத்துநாள்களுக்குள் உங்களைக் கொலை செய்துவிடுவோம்’ என ஒரு மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து ராஜ்பவன் அதிகாரிகள், திருவனந்தபுரம் மாநகர போலீஸாருக்குப் புகார் கொடுத்தனர். இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் என்பவர் தான், இந்த மின்னஞ்சலை அனுப்பியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தகவல் கோழிக்கோடு போலீஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு சம்சுதீனை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் வெறுமனே மிரட்ட மட்டுமே செய்தாரா அல்லது அவரிடம் வேறு திட்டங்கள் எதுவும் இருந்ததா? இதில் வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது எனவும் விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT