உத்தர பிரதேச முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது இன்று பதவியேற்றுக்கொண்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத். அவருடன் 2 துணை முதல்வர்கள், 52 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொள்கிறார்கள். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஸ்ரீகாந்த் சர்மா, சதீஷ் மஹானா, மஹேந்திர சிங், சித்தார்த் நாத் சிங், நீல்கந்த் திவாரி, மோஹ்சின் ராஸா போன்றோருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்படவில்லை.
மோஹ்சின் ராஸாவுக்குப் பதிலாக இந்த முறை டேனிஷ் ஆசாத் அன்சாரி, பாஜக அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக இடம்பிடித்திருக்கிறார்.
பலியா மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மாணவர் தலைவராகத் தன்னை வளர்த்துக்கொண்டவர். ஏபிவிபி அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
உத்தர பிரதேச அரசின் உருது மொழி கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர். உத்தர பிரதேச பாஜக சிறுபான்மைப் பிரிவின் பொதுச் செயலாளராகவும் பதவிவகிக்கிறார்.
சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் நலனில் யோகி ஆதித்யநாத் அரசு மிகுந்த அக்கறை செலுத்திவருவதாகக் கூறியவர் டேனிஷ் ஆசாத் அன்சாரி. கல்வியின் தரத்தை உயர்த்துவது, சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவை யோகி அரசின் முக்கிய நோக்கங்கள் என்றும் கூறியிருந்தார்.
இளைஞர்கள், சிறுபான்மைக் குழுக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர், கட்சித் தலைமையின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பதால், இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.