அரசியல்

வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காமதேனு

மதுரையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். செய்தி அறிந்தவுடன் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT