அரசியல்

மின் கணக்குடன் ஆதாரை இணைக்காவிட்டால் 100 யூனிட் மின்சாரம் ரத்தா?- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

காமதேனு

மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வெளியான செய்திக்கு மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணையதளம் மூலமாக இணைக்கும் வசதி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள பக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைப்பில் ஆதார் அப்டேட் என்ற பிரிவில் சென்று நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் இதன் மூலம் 100 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் தொடர்ந்து மானியம் பெற முடியும் என்றும் செய்தி நேற்று வெளியானது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் மழை பெய்த சீர்காழியில், மின் விநியோகம் பாதிப்புக்குள்ளான இடங்களில், போர்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு, 36 மணி நேரத்திற்குள் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது. அங்கு பழுதடைந்துள்ள மின் கம்பங்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன. ஏறத்தாழ 46 மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பாக பணிகளை செய்தனர். அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதாருடன் மின்கணக்கை இணைக்காவிட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஒரு நுகர்வோர் 3 அல்லது 5 வீடுகள் வைத்திருந்தாலும், ஆதார் எண்ணை இணைக்கும் போது மானியம் தொடரும். ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைத்தால் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு" என்றார்.

SCROLL FOR NEXT