செய்திகள்

பெங்களூருவில் சிக்கிய ரூ.3 கோடி கடத்தல் தங்கம்… மூன்று பெண்கள் கைது!

காமதேனு

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக அவ்வப்போது தங்கம், போதைப்பொருள் கடத்தல் நடந்து வருகிறது. கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் விமான போக்குவரத்து கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் போக்குவரத்து தொடங்கப்பட்ட முதல்நாளே 2-வது முனையத்தில் 3 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்த போது, குறிப்பிட்ட 3 பெண் பயணிகள் மீது சந்தேகம் வந்ததை அடுத்து, அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அதில், அவர்கள் ஆடைகளுக்குள் பற்பசை வடிவில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 3 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்திய 3 பெண்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT