ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள புதரில் இளம்பெண் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் உள்ள எபுருபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி, பெண்கள் பள்ளிக்கு அருகில் உள்ள கழிப்பறைக்கு நேற்று அதிகாலை சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் மீண்டும் திரும்பிவரவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடினர். இந்நிலையில் அந்த பெண், நிர்வாண நிலையில் அருகில் உள்ள புதர் பகுதியில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த உள்ளூர் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படைகளை போலீஸார் அமைத்துள்ளனர். அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே அம்மாநில உள்துறை அமைச்சர் வாங்கலப்புடி அனிதா, சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில், “குற்றவாளிகள் 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட வேண்டும். அலட்சியத்துக்கு இடமில்லை. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.10 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்” என்றார்.