கோடாரி (சித்தரிப்புக்கானது) 
செய்திகள்

கணவனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி... மகளிடம் அத்துமீறியதால் ஆத்திரம்!

கவிதா குமார்

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை கோடாரியால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சௌகுடர் மண்டலத்தின் சுல்தான்பூரைச் சேர்ந்தவர் மன்னே மனையா. இவரது மகன் பிரவீன்குமார் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டார். அப்போதிருந்து தனது மனைவி இந்திரம்மா, இரண்டு மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மன்னே வசித்து வந்தார்.

மது

இந்த நிலையில், மூத்த மகள் சுகன்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மன்னே மனையா குடிபோதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அன்றாடம் குடித்து விட்டு வந்து மனைவி, மகள்களை கொடுமைப்படுத்தி வநதுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தனது மூத்த மகளிடம் மன்னே தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி இந்திரம்மா, அருகில் இருந்த கோடாரியால் தனது கணவர் மன்னே மனையாவை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மன்னே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஜோகிப்பேட்டை காவல் ஆய்வாளர் அனில்குமார், புல்கல் எஸ்.ஐ ஸ்ரீகாந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மன்னே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இந்திரம்மாவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT