செய்திகள்

ரூ.10 கோடி எதுக்கு... என் தலையை சீவ 10 ரூபாய் சீப்பு போதும்! உதயநிதி பதிலடி!

காமதேனு

உதயநிதி தலையைக் கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் தரப்படும் என்று அறிவித்த சாமியாருக்கு, கலைஞர் ஸ்டைலில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்து தற்போது இந்திய அளவில் ஹாட் டாபிக்காக உள்ளது. அனைத்து தரப்பினரும் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா என்ற சாமியார்  அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வந்தால் 10 கோடி ரூபாய் தரப்படும் என அறிவித்தார். மேலும், உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தி, தீயிட்டு கொளுத்தினார்.

இந்நிலையில் சாமியாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என்று மீண்டும் உறுதியாக கூறினார்.

எனது தலையை சீவ 10 கோடி ரூபாய் எதற்கு, 10 ரூபாய் சீப்பு போதுமே என்று கலைஞர் பாணியில் கிண்டலாக பதிலடி கொடுத்தார். மேலும், 10 கோடி ரூபாய் பணம் ஒரு சாமியாரிடம் எப்படி இருக்கும், அப்படி என்றால் அவர் போலி சாமியாரா என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு, கொரோனா போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை எதிர்த்தால் மட்டும் போதாது, முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் உதயநிதிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய அளவில் ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT