கர்நாடகா மாநிலம், ஹாசனில் பட்டப்பகலில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம்,ஹாசன் மாவட்டம் சமீப காலமாக செய்திகளில் அடிபடுவது வழக்கமாகி விட்டது. ஜேடிஎஸ் எம்.பியாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு தற்போது ஹாசனை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு (எஸ்ஐடி) குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஹாசனில் இன்று காலை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் நகர் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹொய்சலாநகரில் இந்த சம்பவம் நடைபெற்றது. காரில் இருந்த இருவரை சுட்டுக்கொன்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டவர்கள் ஹாசனைச் சேர்ந்த ஷரபத் அலி, பெங்களூருவைச் சேர்ந்த ஆஷிப் என்று போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சொத்துப் பிரச்சினையில் இந்த இரட்டைக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஹாசன் எஸ்பி முகமது சுஜீதா சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
மர்ம நபர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனரா அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்றனரா என்பது விசாரணையில் தெரிய வரும் என்று எஸ்.பி.முகமது சுஜீதா கூறியுள்ளார். பட்டப்பகலில் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.