விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் 
செய்திகள்

'போஸ்டர் ஒட்டி, கொடி பிடிப்பவர்கள் கைவிடப்படமாட்டார்கள்’ - புஸ்ஸி ஆனந்த் பேச்சால் தவெக நிர்வாகிகள் உற்சாகம்

வ.வைரப்பெருமாள்

"சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டி, கொடி பிடிப்பவர்கள் ஒரு நாளும் கைவிடப்பட மாட்டார்கள்" என்று, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கி, வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்

இதற்காக கட்சி கட்டமைப்பை பலப்படுத்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர், முத்தன்னம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய புஸ்ஸி ஆனந்த், “யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் வழங்கப்படும். எப்பேர்பட்ட பணக்காரர்களாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம்.

புஸ்ஸி ஆனந்த்

ஆனால், யாரெல்லாம் உழைத்து, சைக்கிளை ஓட்டிச் சென்று, போஸ்டர் ஒட்டி, கொடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்களா, அவர்கள் ஒருநாளும் கைவிடப்படமாட்டார்கள். சும்மா, வீரவசனம் பேசிவிட்டு மைக்கில் கைதட்டிவிட்டு போவது கிடையாது" என்றார். அவரது இந்தப் பேச்சு, தவெக நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT