வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி)
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் (மாதிரி) 
செய்திகள்

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல்... வள்ளலார் சர்வதேச மையம் வழக்கில் அரசு குற்றச்சாட்டு

காமதேனு

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன் அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், கோவில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள இடம்

அப்போது, மனுதாரர் தரப்பில், "106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது. 150 ஆண்டு புராதன பகுதியான இங்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை. இந்த பகுதியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள பக்தர்கள் விரும்பவில்லை. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை என்பதால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "வள்ளலார் சர்வதேச மையம், பிரதான கோவிலுக்கு அருகில் அமையவில்லை. 99.90 கோடி ரூபாய் அரசு செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானதாகவே இருக்கும்.

வள்ளலார் சத்திய ஞானசபை

பெருவெளி பகுதியான 71 ஏக்கரில் மூன்று ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தொல்லியல் துறை ஆய்வில் சில தொன்மையான படிமங்கள் கிடைத்ததால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் துறை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பாதுகாக்கப்படும். பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கு தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்" என்றார்.

இதையடுத்து, நிபுணர் குழு அறிக்கை அளிக்க மூன்று, நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என்பதால் கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்தி வைக்க கூடாது என நீதிபதிகள் அரசுத்தரப்பை கேட்ட போது, பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தலைமை வழக்கறிஞர் உறுதி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே 10ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ReplyReply allForwardAttendee panel closed

SCROLL FOR NEXT