திடீர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் 
செய்திகள்

தஞ்சாவூரில் திடீரென பெய்த கோடைமழை... நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்!

கே.காமராஜ்

தஞ்சாவூரில் திடீரென பெய்த கோடை மழை காரணமாக பல நூறு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். அவ்வப்போது மழை பெய்த போதும், வெப்பநிலை அதிகமாகவே இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர். இதனிடையே தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. ஓரிரு நாட்களில் அறுவடையை துவங்குவதற்காக விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர்.

திடீர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்

இந்த நிலையில் நேற்று மதியம் துவங்கி தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. அம்மாபேட்டை, புத்தூர், உடையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திடீர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்

நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து இருப்பதால், விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என கவலை தெரிவித்துள்ளனர். மழை காரணமாக சேதமடைந்த பகுதிகளை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT