கொலை 
செய்திகள்

மஞ்சுவிரட்டு மாடு வளர்த்த அண்ணன், தம்பி வெட்டிக் கொலை... நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

வ.வைரப்பெருமாள்

சிவகங்கை அருகே காளையார்கோவில் பகுதியில் மஞ்சுவிரட்டு விழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ். இவர்கள் இருவரும் மஞ்சுவிரட்டு மாடு வளர்த்து வந்தனர்.

இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களான, சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த ராஜேஷ், சாத்தரசன்பட்டியைச் சேர்ந்த நவீன், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த அஜய் ஆகியோருடன் சேர்ந்து சிவகங்கை மாவட்ட பகுதிகளில் நடக்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் தனது மாடுகளை அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

மஞ்சுவிரட்டு

இந்நிலையில் கடந்த ஜூன் 22-ம் தேதி பனங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் தங்களது மாடுகளை அவிழ்த்துவிட்டனர். அதனை புதுப்பட்டியைச் சேர்ந்த மதன், அவரது நண்பர்கள் பிடித்துள்ளனர்.

இதனால் ஜெயசூர்யா தரப்புக்கும், மதன் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரும், தங்களது நண்பர்களான ராஜேஷ், நவீன் ஆகியோருடன் காளையார்கோவில் அருகே கே.கே.நகர் பின்புறம் விவசாய நிலத்தில் தங்களது மாடுகளுடன் தங்கியிருந்தனர்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், அண்ணன், தம்பிகளான ஜெய்சூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

தகவலறிந்த காளையார்கோவில் போலீஸார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT