விஜய், சீமான். 
செய்திகள்

‘என் அன்புத்தளபதி விஜய்’ - கல்வி விருதுகள் குறித்து நெகிழ்ந்த சீமான்!

வீரமணி சுந்தரசோழன்

தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியருக்கு உதவித்தொகை வழங்கி ஊக்கப்படுத்தும் என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடிகர் விஜய் ஊக்கத்தொகை கொடுத்து வாழ்த்தினார். இரண்டாம் ஆண்டாக இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டம் நிகழ்ச்சி சென்னை, நீலாங்கரையில் இன்று நடந்து வருகிறது. நடிகர் விஜய் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார்.

மாணவிகளுடன் நடிகர் விஜய்

இதனை பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!’ என்று அவர் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT