ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் 
செய்திகள்

இன்று விபீஷண பட்டாபிஷேகம் ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு!

கே.காமராஜ்

தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்ட ராமர் கோயிலில் நடைபெறும் விபீஷண பட்டாபிஷேகம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள ராமநாதசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ராமாயண காலத்தில் ராவணனை வதம் செய்த பின்னர் தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரம் கடற்கரையில் ராமபிரான் உருவாக்கிய லிங்கமே இந்த கோயிலில் உள்ள ராமநாதசாமி என்று நம்பப்படுகிறது.

ராவணனை வதம் செய்த பின்னர் ராவணனின் தம்பி விபீஷணனுக்கு இலங்கை அரசனாக பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சி தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்ட ராமர் ஆலையத்தில் நடைபெற்றதாக நம்பப்படுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்

இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14ம் தேதி ராமநாதசாமி கோயிலில் ராவண சம்ஹார நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷண பட்டாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு ராவண வதம் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, இன்று விபீஷண பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை ஒட்டி இன்று அதிகாலை 2 மணி அளவில் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

கோயில் நடை சாத்தப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அதைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காலை 7:30 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டு, விபீஷண பட்டாபிஷேகத்திற்காக ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கோதண்டராமர் கோயிலுக்கு புறப்பட்டனர். மதியம் 12 மணியளவில் விபீஷணருக்கு பட்டாபிஷேகத்தை முடித்து வைத்த பின்பு, மீண்டும் மாலை 5 மணி அளவில் ராமநாதசாமி கோவிலுக்கு சாமிகள் வருகை தருகின்றனர். இதைத் தொடர்ந்து மீண்டும் நடைதிறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT