ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகள் 
செய்திகள்

இலங்கைக்கு எதிராக ஆவேசம்.... ராமநாதபுரம் நாட்டு படகு மீனவர்கள் போராட்டம் தொடங்கியது!

கவிதா குமார்

இலங்கை கடற்படை அட்டூழியத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடக்கியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள்

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்து சிறை பிடித்தனர். இதில் பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை பகுதியைச் சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

இலங்கை கடற்படை

அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்து மீனவர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 25 மீனவர்கள், 4 நாட்டுப்படகுகளை விடுவிக்க கோரி நாட்டுப்படகு மீனவர்கள், பாம்பன் கடலில் இறங்கி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக சென்று பேருந்து நிறுத்தம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று அவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பினர்.

இதனிடையே இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். ஜூலை 5-ம் தேதி சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT