தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா, நடிகர் சரத்குமார் 
செய்திகள்

விருதுநகரில் ராதிகா வெற்றி பெற வேண்டும்: மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதட்சணம்

வ.வைரப்பெருமாள்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவி வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார், அங்குள்ள மாரியம்மன் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்து வழிபட்டார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது கணவர் நடிகர் சரத்குமாருடன் தொகுதி முழுக்க வலம் வந்து ராதிகா சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இத்தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்பி- மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிராபகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

ராதிகா, சரத்குமார்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், திமுக கூட்டணி வேட்பாளர் மாணிக்கம் தாகூரே இத்தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூடுவார் என தெரிவித்துள்ளன.

எனினும், இதர கட்சிகளின் வேட்பாளர்களும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம்

இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தனது மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டியும், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும், நடிகர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT