கேஎம்சிஎச் மருத்துவமனை - உயிரிழந்த ராஜா 
செய்திகள்

மருத்துவமனையில் திருட வந்ததாக கூறி ஒருவர் அடித்துக்கொலை... மருத்துவமனை நிர்வாகி உட்பட 8 பேர் கைது!

கே.காமராஜ்

கோவையில் மருத்துவமனையில் திருட வந்ததாக கூறி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி உட்பட 8 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி(எ) ராஜா. இவரது மனைவி சுகன்யா. இவருக்கு பள்ளி செல்கின்ற வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ராஜா நேற்று அவினாசி சாலையில் உள்ள கோவை மெடிக்கல் செண்டர் ஹாஸ்பிடல் (கேஎம்சிஎச்) என்ற தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கம்பிகளை திருட முயற்சித்தாக மருத்துவமனையில் பணியில் இருந்த செக்யூரிட்டிகளும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் அவரை பிடித்து அடித்தாக தெரிகிறது. இதில் அவர் மயக்கமடைந்த நிலையில், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கதறும் உயிரிழந்த ராஜாவின் உறவினர்கள்

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணையை துவக்கினர். இதனிடையே ராஜாவின் குடும்பத்தினர் கோவை பீளமேடு காவல் நிலையத்தில், மருத்துவமனை நிர்வாகத்தினர் ராஜாவை கொலை செய்து விட்டதாகவும், மருத்துவமனை மீதும், ராஜாவை தாக்கியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜாவின் மனைவி சுகன்யா

இது குறித்து பேசிய ராஜாவின் மனைவி சுகன்யா, ”கேஎம்சிஎச் மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறிவிட்டு தான் என் கணவர் சென்றார். ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் எதற்காக இந்த வழியில் வந்தாய் என்று எனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து 3 பேர் போலீஸ் என பொய் சொல்லி எனது வீட்டிற்கு வந்து விசாரித்து, என்னை புகைப்படம் எடுத்து சென்றனர். மருத்துவமனைக்கு சென்று நாங்கள் போராடினோம். பின்பு தான் எனது கணவர் இறந்து விட்டார் என்று எங்களிடம் கூறினர். வீட்டிற்கு வந்த 3 பேர் மீதும், மருத்துவமனை நிர்வாகம், அதன் எம்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

கேஎம்சிஎச் மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன்

இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவமனை பாதுகாவலர்கள், நிர்வாகத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சசிகுமார் (37), மருத்துவமனையின் துணைத்தலைவர் நாராயணன்(47), மணிகண்டன் (36), சரவணகுமார் (34), சுரேஷ்குமார்(51), லோகநாதன்(46), குமரவடிவேல்(47), திருப்பதி நாதன் (61), சுரேஷ் (50), சாஸ்திரி(56), சார்லஸ்(45), சதீஷ்குமார்(42), சரவணகுமார் (34), ரமேஷ்(36), நாகேந்திர ராஜன் (37) ஆகிய 11 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த நிலையில்,  மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன், தகவல் பிரிவு மேலாளர் ரமேஷ், செயலாக்கத்துறை அதிகாரி சரவணகுமார், பிஆர்ஓ சசிக்குமார்,  பிளம்பர் சுரேஷ் ,  சரவணகுமார், பாதுகாவலாளி மணிகண்டன் , ஸ்டோர் மேனேஜர் சதீஷ்குமார் ஆகிய 8 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை குமரியில் மோடியின் தியான நிகழ்ச்சி நடக்குமா?!காங்கிரஸ் கட்சியால் பெரும் பரபரப்பு!

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை... கடலோர காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்துப்பணி

பகீர்... அரசு பள்ளிக்குள் மாணவிக்கு நடந்த அக்கிரமம்: கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் கைது!

பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் எஸ்ஐடி விடிய விடிய சோதனை... கட்டில், தலையணைகள் பறிமுதல்!

SCROLL FOR NEXT