சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வரை வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைப்பதற்காக வரும் 20ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று, மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் 3வது முறையாக பிரதமர் பதவியேற்ற பின்னர் தமிழகத்துக்கு முதல் முறையாக, பிரதமர் மோடி வரும் 20ம் தேதி வர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அன்றைய தினம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளதாகவும், மேலும் பல்வேறு ரயில்வே திட்டங்களை அவர் துவங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று, புதிய ஆட்சி அமைந்த பிறகு, தற்போது பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதால் தமிழக பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். பிரதமர் வருகைக்கான பணிகளில் ரயில்வே துறையும், பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.