பிரதமர் நரேந்திர மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் அரசியல் சாசனம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில் மக்களவைக்கு வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமரும், அமித் ஷாவும் தொடுக்கும் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை அனுமதிக்க மாட்டோம்.
நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்யும்போது அரசியல் சாசனத்தை வைத்திருந்தோம். அரசியல் சாசனத்தை எந்த சக்தியாலும் தொட முடியாது என்பதே நாங்கள் கூறும் செய்தி.” இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்தது ஜனநாயகத்தின் மீது விழுந்த கருப்பு புள்ளி என 1975ல் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை குறித்து காங்கிரஸை விமர்சித்தார். அதற்கு பதிலடியாக ராகுல் காந்தி தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில், தங்களின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிய அளவிலான அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியபடி, "ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்" என முழக்கங்களை எழுப்பினர்.