பழுதான அரசுப்பேருந்தை பயணிகள் தள்ளும் அவலம் 
செய்திகள்

ஏய் தள்ளு தள்ளு! பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிச்செல்லும் அவலம்

கே.காமராஜ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பேருந்து ஒன்று நடுவழியில் பழுதாகி நின்றதால், பேருந்து பயணிகள் அரசுப் பேருந்தை தள்ளிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக எஸ்.பி.பி. காலனி பேருந்து நிறுத்தம் வரை சென்று திரும்பும் வகையில் அரசுப் பேருந்து ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல நேற்று ஈரோட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து எஸ்.பி.பி. காலனி பகுதிக்கு சென்றது. பின்னர் மீண்டும் பள்ளிபாளையம் நோக்கி சென்ற அந்த பேருந்து காவேரி ஆர்.எஸ். என்ற பகுதி அருகே சென்ற போது திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்றது.

பள்ளிபாளையம்

அரசுப் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை இயக்க முற்பட்டும் பேருந்து நகரவே இல்லை. இதனையடுத்து பேருந்து நடத்துநர், உள்ளூர் பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோர் அரசுப் பேருந்தை முன்னும் பின்னுமாக தள்ளி இயக்க வைக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் போராடியும் பேருந்தை இயக்க முடியாததால், பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி சென்றனர்.

பழுதான அரசுப்பேருந்தை பயணிகள் தள்ளும் அவலம்

இதனை அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு, பேருந்து பழுது நீக்கப்பட்டு மீண்டும் ஈரோடு சென்றது.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் இது போன்ற பரமாரிப்பில்லாத பேருந்துகள் பழுதாகி நடுரோட்டில் நிற்பது அதிகரித்து வருகிறது. இதனை சரிசெய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT