அச்சு முறிந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து 
செய்திகள்

திடீரென அச்சு முறிந்து சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து... 39 பயணிகள் படுகாயம்!

கே.காமராஜ்

விருதுநகர் அருகே அதிகாலையில் அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 39 பேர் காயமடைந்தனர்.

கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிக்கு அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி பகுதி அருகே அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45-க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்தை ஓட்டுநர் முருகபூபதி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அச்சு முறிந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 7 குழந்தைகள் உட்பட 34 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றன.

அச்சு முறிந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து

இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது பேருந்தின் அச்சு முறிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பேருந்தை பணிமனைக்கு எடுத்துச் செல்லும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT