ஐஆர்சிடிசி உணவில் கரப்பான் பூச்சி 
செய்திகள்

குலாப்ஜாமூனில் ஊர்ந்த கரப்பான் பூச்சி... ஐஆர்சிடிசி பரிமாறிய உணவுடன் ரயில் பயணி வேதனை வீடியோ

காமதேனு

ரயில் பயணத்தின்போது ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவில், ஊர்ந்த கரப்பான்பூச்சி தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் பயணத்தின்போது அதே ரயிலில் இயங்கும் உணவகம் மூலமாக தேவையான உணவை ஆர்டர் செய்து, தங்கள் இருக்கையில் இருந்தபடியே பயணிகள் பசியாறலாம். ஒப்பந்த அடிப்படையில் இந்த உணவகத்தை ஐஆர்சிடிசி நடத்தி வருகிறது.

ரயிலில் பரிமாறப்படும் உணவு

ஐஆர்சிடிசி உணவின் தரம், ருசி குறித்து பலவிதமான விமர்சனங்கள் வலம் வந்தபோதும், தற்போது வெளியாகி இருக்கும் ’குலாப்ஜாமூன் கரப்பான்பூச்சி’ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் இருந்து மும்பையின் லோக்மான்யா திலக் முனையத்துக்கு பயணித்த ஒருவர், இந்த அதிர்ச்சிகர சம்பவம் தொடர்பான வீடியோவை ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ”முதல் முறையாக ஐஆர்சிடிசியில் இரவு உணவு ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு கிடைத்ததோ உயிருள்ள கரப்பான் பூச்சி” என பதிவிட்டிருந்தார்.

ரெடிட் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், இரவு உணவுடன் இடம்பெற்றிருந்த குலாப்ஜாமூனில் ஒரு கரப்பான் பூச்சி ஊர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இணையவாசிகள் பலரும் ஐஆர்சிடிசி உடனான தங்களது கசப்பான அனுபவங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து ’இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே ரயில் பயணத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், ஐஆர்சிடிசி உட்பட ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் கிடைக்கும் உணவுகள் தரமற்றவை’ எனவும் இணைவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ஐஆர்சிடிசி மூலம் உணவுகளை ஆர்டர் செய்வதற்கு முன்னர், உணகவத்தின் ரேட்டிங்கை கவனிப்பது அவசியம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஐஆர்சிடிசி ஆர்டர் மூலம் ருசித்த உணவால் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT