தமிழகத்தில் 547 ஆம்னி பேருந்துகளை இயக்க தடை 
செய்திகள்

ஆம்னி பேருந்துகளுக்கு இன்று முதல் கெடுபிடி; பேருந்து உரிமையாளர்கள் அவசர ஆலோசனை!

வ.வைரப்பெருமாள்

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மாற்று வழி குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை, தமிழகத்தில் இயக்குவதற்கு தமிழக பதிவு எண்ணுக்கு மாற்றுமாறு போக்குவரத்துத் துறை சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கு தமிழக அரசு விதித்திருந்த காலக்கொடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இதையடுத்து காலக்கெடு முடிந்தும், பதிவு எண்ணை மாற்றாமல் வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்கினால் துறை ரீதியான அபராதம், பேருந்து பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை

இந்நிலையில் வார இறுதி விடுமுறை, பக்ரீத் விடுமுறை என தொடர் விடுமுறை வந்தது. இந்த நேரத்தில், பதிவு எண் விவகாரத்தில் ஆம்னி பேருந்து தடை அமலுக்கு வந்தால் பயணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால், தடை விதிக்கும் கால அவகாசம் கூடுதலாக 2 நாள்கள் (நேற்று வரை) நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை வழங்கிய கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெளி மாநில பதிவு எண்ணை மாற்றாத 547 ஆம்னி பேருந்துகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தடையை மீறி பேருந்துகள் இயக்கப்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்னி பேருந்துகள்

இச்சூழலில் பேருந்துகளை இயக்க மாற்று வழி என்ன என்பது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதேபோல், ஏற்கெனவே முன் பதிவு செய்த பயணிகள் பாதிக்காமல் இருப்பதற்கான மாற்று வழி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT