பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற நிதிஷ்குமார் 
செய்திகள்

மோடியின் கால்களில் விழுந்து பீகார் மக்களை நிதிஷ்குமார் அவமானப்படுத்தியுள்ளார்: பிரசாந்த் கிஷோர் கடும் விமர்சனம்!

வ.வைரப்பெருமாள்

ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

அரசியல் உத்தி வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீகார் மாநிலம், பாகல்பூரில் நேற்று ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது அவரை ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோர்

அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவரது மனசாட்சியை விற்பனைக்கு வைக்கவில்லை. ஒரு மாநிலத்தின் தலைவர், அதன் மக்களின் பெருமை. ஆனால், பிரதமர் மோடியின் கால்களில் விழுந்து நிதிஷ்குமார் பீகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தினார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள்.

ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்துக்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை. 2025 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத் தொடுகிறார்.”

இவ்வாறு பிரஷாந்த் கிஷோர் பேசினார்.

பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களை வென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், இரண்டாவது பெரிய கூட்டாளியாக (தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக) உள்ளது.

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார். அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, பிரசாந்த் கிஷோர் தற்போது நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT