லக்னோவில் ஐசியூவில் நடந்த திருமணம். 
செய்திகள்

மருத்துவமனையின் ஐசியூவில் நடந்த திருமணம்... நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ!

கவிதா குமார்

தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவரது மகள்களின் திருமணம் செய்து கொண்ட வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருமணங்கள் பண்டிகைகளை விட மிகச்சிறப்பான முறையில் நடத்தப்படுகின்றன. ஊரையை அழைத்து விருந்து வைத்து நடத்தப்படும் திருமணவிழாக்களில் கேளிக்கை, மது என சகல சௌகரியங்களும் செய்யப்படுகின்றன. வானதிரும் வெடிகளும், விண்ணை முட்டும் பிளக்ஸ் பேனர்களும் என ஆடம்பரங்கள் நிறைந்த திருமணக் கொண்டாட்டங்கள் பெருத்து விட்டன. இந்த நிலையில் தான், மருத்துவமனையின் அவசரப் பிரிவில் ஒரு திருமணம் நடைபெற்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருமணம்

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் இரண்டு பெண்கள், தங்களின் நோய்வாய்ப்பட்ட தந்தையின் விருப்பத்திற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மருத்துவ கவுன்களை அணிந்த தம்பதிகள் மருத்துவமனை நெறிமுறைகளைப் பின்பற்றி திருமணம் செய்துள்ளனர், இந்த வார்டில் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள @TrueStoryUP என்ற பதிவர், “லக்னோவின் எரா மருத்துவமனையின் ஐசியூவில் ஒரு தனித்துவமான திருமணம் நடந்தது. முகமது இக்பால், எரா மருத்துவமனையின் ஐசியூவில் நோயுடன் போராடி வருகிறார். அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர் தனது மகள்களின் திருமணத்தை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தை தனது கண்களுக்கு முன்னால் வைத்தார். நிக்காஹ் செய்த மௌலானாவையும், மாப்பிள்ளையையும் ஐசியூவுக்குள் அனுமதிக்க மருத்துவர்கள் அனுமதியளித்து, நிக்காஹ் செய்துகொள்ள வைத்தனர், நிக்காஹ் எரா ஹாஸ்பிட்டலில் எளிமையாகவும் சடங்குகளுடன் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ பல சமூக ஊடக பயனர்களின் இதயங்களை வென்றுள்ளது. அதற்கு பதிலளித்த ஒரு பயனர்," திருமணமான தம்பதிகளுக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும், மேலும் முகமது இக்பால் தனது மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், வாழ்க்கையின் மற்ற அழகான விஷயங்களையும் பார்க்க விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT