தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு 
செய்திகள்

புனேவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேர் உயிரிழப்பு: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

வ.வைரப்பெருமாள்

மகாராஷ்டிரா மாநிலம், புனே லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சியில் மூழ்கி, சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை நீர்வீழ்ச்சிக்கு நேற்று ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும், 4 குழந்தைகளும் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் சென்று நின்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால், அவர்கள் அச்சமடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் தண்ணீரில் அடுத்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவர்களை காப்பாற்ற இயலவில்லை. தற்போது ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஷாஹிஸ்தா அன்சாரி (36), அமிமா அன்சாரி (13), உமேரா அன்சாரி (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற இருவரான அட்னான் அன்சாரி (4), மரிய சையத் (9) ஆகிய இருவரையும் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

இவர்கள், புனே நகரின் சையத் நகர் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில் ஷாஹிஸ்தா அன்சாரி உள்ளிட்ட 5 பேரும் தண்ணீரில் அடுத்துச் செல்லப்பட்ட, அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புனே ரூரல் எஸ்பி- பங்கஜ் தேஷ்முக் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT