1975ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை கண்டித்து மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கண்டன தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
18வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்களில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஓம் பிரில்லா 2வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த 1975ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, அவசரநிலை பிரகடனத்தால் ஜனநாயகத்திற்கு இழுக்கு ஏற்பட்டதாகவும், பொது மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.
சபாநாயகரின் இந்த கருத்துக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என அவர்கள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். கடும் அமளிக்கிடையே இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளிலேயே ஒத்திவைக்கப்பட்டது. வரும் நாட்களில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களவையில் கேள்வி எழுப்ப உள்ள நிலையில், முதல் நாளிலேயே அமளி காரணமாக கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.