குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விஷ்வதர்ஷினி 
செய்திகள்

காவல் துறை குறித்து அவதூறாக பேசி வீடியோ... கோவை பெண் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

கே.காமராஜ்

கோவையில் காவல்துறையினரை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டது, மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளில் கைதான விஷ்வதர்ஷினி என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வதர்ஷினி. இவர் ஃபேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரைச் சேர்ந்த செலினா என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது, தான் டைகர்வே என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி செலின் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விஸ்வதர்ஷினியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை திரும்பத் தராததால், செலினா சந்தேகமடைந்து கேட்ட போது, விஸ்வதர்ஷினி அவரை அவதூறாக பேசியதோடு, சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் செலினா மற்றும் காவல் துறையினரைத் திட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்

இது தொடர்பாக செலினா அளித்த புகாரின் பேரில், கடந்த மே 8-ம் தேதி கோவை போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விஷ்வதர்ஷினி கோவை காவல்துறைக்கு எதிராக பொது மக்களைத் தூண்டும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும், பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால் செல்வபுரம் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரில் மீண்டும் செல்வபுரம் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே விஷ்வதர்ஷினிமீது துடியலூர் காவல் நிலையத்தில் காவல் துறையிருடன் ஆபாசமாக பேசி பணி செய்ய விடமால் தடுத்தது, பிரகாஷ் ஸ்வாமி என்பவரை மிரட்டியது என வழக்குகள் இருக்கின்றன.

கோவை மத்திய சிறை

மேலும் விஷ்வதர்ஷினி மீது கடந்த 2018-ம் வருடம் சிறுமியை பற்றி சமூகவலை தளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதற்கு எதிராக விஸ்வதர்ஷினி மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷ்வதர்ஷினி தொடர்ந்து பொது மக்களையும், காவல் துறையினரையும் மிரட்டுவதையும், அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரின் நடவடிக்கை கட்டுபடுத்தும் பொருட்டு கோவை மாநகர போலீஸார் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கோவை மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் விஷ்வதர்ஷினியிடம் இதற்கான உத்தரவினை போலீஸார் வழங்கினர்.

SCROLL FOR NEXT