ஜவாஹிருல்லா எம்எல்ஏ  
செய்திகள்

ஊழல்வாதிக்குத் துணை போகும் ஆளுநர் ரவி... மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

கவிதா குமார்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக் காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், அவரை ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

பெரியார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜெகநாதன்

துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் எனஅடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஒருவரை மீண்டும் பதவி நீட்டிப்புசெய்திருப்பது ஏற்புடையது அல்ல.

தனது பொறுப்பை உணராமல் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாக இவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பல்கலைக்கழகத்தின் தொழிலாளர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து துணைவேந்தருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கு எதிரான நிலைப்பாட்டைத் தான் ஆளுநர் ரவி செய்து கொண்டிருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களின் வருகை தொடங்க இருக்கும் நேரத்தில் இது போன்ற அறிவிப்பு வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. ஊழல்வாதிக்குத் துணை போகும் ஆளுநரைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT