பார்த்திபன் 
செய்திகள்

நடிகர் பார்த்திபன் கொடுத்த மோசடி புகார்!

ச.ஆனந்தப்பிரியா

கோவையைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் நிறுவனம் மீது நடிகர் பார்த்திபன் மோசடி வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

’இரவின் நிழல்’ படத்தை அடுத்து நடிகர் பார்த்திபன் ‘டீன்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணியாளராக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் பணிபுரிந்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதமே கிராஃபிக்ஸ் பணிகளை முடித்து தருகிறேன் எனச் சொல்லி ரூ. 68.50 லட்சம் பணம் கேட்டிருக்கிறார். ரூ. 42 லட்சம் கொடுத்த பார்த்திபன், சிவப்பிரகாஷ் சொல்லியபடி பணிகளை முடிக்காததால் முழுத் தொகையும் கொடுக்காமல் கால நீட்டிப்பு செய்திருக்கிறார்.

படத்தின் முக்கிய காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என்றும் சிவபிரசாத் சொல்லி இருக்கிறார். இதுமட்டுமல்லாது, கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ரூ. 88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.

நடிகர் பார்த்திபன்

இதனால், கோபமடைந்த பார்த்திபன் சிவபிரசாத் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT