திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 
செய்திகள்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை... கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்!

கே.காமராஜ்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யும் தணிக்கைக்குழு கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருடாந்திர வரவு செலவுகளை ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்த தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அதிரடியாக நேற்று மாலை தணிக்கைக்குழு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம்

மேலும் அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான விவரங்களை சேகரித்தனர். இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது. அவர்களிடம் போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டு லட்சத்திற்கு மேல் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி அலுவலர் மற்றும் ஊழியர்களிடம், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் சோதனையால் அரசு ஊழியர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT