photo background Light BG
செய்திகள்

பெண்களே உஷார்... மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்து நகையை பறித்துச் சென்ற இளைஞர்

கே.காமராஜ்

கோவை அருகே மளிகைக் கடையில் பொருள் வாங்குவது போல நடித்து பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்ற வாலிபரை, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி வழக்கம் போல விற்பனைக்காக மளிகைக் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர் தனலட்சுமியின் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

கைது செய்யபொபட்ட மேத்யூவுடன் அன்னூர் போலீஸார்

இது சம்மந்தமாக தனலட்சுமி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபரை பிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் மளிகைக் கடையில் தனலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் அறுத்து சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணையை முன்னெடுத்தனர்.

வழிப்பறி செய்த பணத்தில் வாங்கப்பட்ட பைக்

இந்நிலையில் நேற்று அன்னூர் அருகே குன்னத்தூர் பகுதியில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கோவையைச் சேர்ந்த சேவியர் அமல்ராஜ் மகன் பிலிப் மேத்யூ (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தனலட்சுமியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மேத்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று காலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT