முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாக்குழுவினர்  
செய்திகள்

கோயில் தேரோட்டம் திராவிட மாடல் அரசின் முயற்சியால் நடந்தது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கே.காமராஜ்

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் தேரோட்டம், திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் சிறப்புடன் நடைபெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இங்கு தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை மூலம், இக்கோயிலில் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏராளமான மக்கள் பங்கேற்று அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தேரோட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதை அடுத்து கோயில் நிர்வாகத்தினர் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய கலைஞரின் மகனாக பெருமிதம் கொண்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம்

அவர் தனது பதிவில், ’18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம், நமது திராவிட மாடல் அரசின் முயற்சிகளால் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்புடன் நடைபெற்றது. இதற்காக அந்தப் பகுதி மக்கள் இன்று என்னைச் சந்தித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்தனர். ஓடாத திருவாரூர்த் தேரை ஓட்டிய தலைவர் கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT