மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 
செய்திகள்

அதிகரிக்கும் பயங்கரவாதம் குறித்து அமித் ஷா தீவிர ஆலோசனை... ஜம்மு காஷ்மீர் அமைதிக்கு அதிரடி ஆரம்பம்

எஸ்.எஸ்.லெனின்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தலையெடுக்கும் பயங்கரவாதம் கவலையளிக்கும் வகையில் வளர்ந்ததை அடுத்து, பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆராய்ந்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரத்தை உறுதிசெய்யவும் கண்காணிக்கவும் புதிய வழிமுறைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஜூன் 16 அன்று உயர்மட்டக் கூட்டத்துக்கும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் நிலவரம் மற்றும் அங்கே அதிகரிக்கும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இன்றைய தினம் உயரதிகாரிகள் அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கமளித்தனர். கடந்த நான்கு நாட்களாக ஜம்மு காஷ்மீரின் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பக்தர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் ஜவான் கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் காயமடைந்தனர்.

கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்டரில் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கடந்த வாரம், ஷிவ் கோரி கோவிலில் இருந்து கட்ராவில் உள்ள அன்னை வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ​​பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ரியாசியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ரியாசி பயங்கரவாதிகள் சுட்டதால் விபத்தில் சிக்கிய பேருந்து

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இருந்து பதர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து, திடீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 50 பேரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோடி 3.0 ஆட்சி பொறுப்பேற்ற நாளன்று நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் புதிய அரசுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினை குறித்து சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மோடியும், இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT