செய்திகள்

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக ஆதரவு கொடுக்கும் - எடப்பாடி பழனிசாமி திடீர் ட்விஸ்ட்!

வீரமணி சுந்தரசோழன்

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சியினர் துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால் அதிமுக ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி. உண்ணாவிரதம் மேற்கொண்டன. ஆனால், இறந்தவர்களின் பாதிப்பை முதல்வர் உணராமல், சிபிசிஐடி விசாரிக்கும் என காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் தெரிவித்தார். அப்போது சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்தது தவறு. 10.07.2020 அன்று சிபிசிஐடியிடம் இருந்த அந்த வழக்கு, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், தவறான செய்தியை அரசின் அழுத்ததின் காரணமாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். ஆளும் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியின் போது, கொரோனா காலத்தில் 10 மாதம் டாஸ்மாக் கடைகளை மூடிய போது கூட கள்ளச் சாராய உயிரிழப்பு இல்லை. ஆனால், இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதிமுக- வின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சார்பில் கவன ஈரப்பு தீர்மான கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எஸ்பியிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என இரண்டரை வருடங்களாக தெரிவித்து வருகிறேன்.

கள்ளச் சாராயத்தை தடுக்க உண்ணாவிரதம் இருந்தபோது, நல்ல காரியம் என நாம் தமிழர் கட்சி துணை நின்றார்கள், ஆதரவு தெரிவித்தனர். அவர்களும், உண்ணாவிரதம் இருந்தால், அதிமுகவும் ஆதரவு கொடுக்கும். அதிமுகவை பயன்படுத்தினால் தான் ஓட்டு கிடைக்கும் என பாமகவினர் முடிவு செய்துள்ளனர். அதிமுக தலைவர்கள் படம் இருந்தால் தான் வாக்கு விழும் என எதிர் அணியினர் நினைப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இது எங்கள் தலைவருக்கான மரியாதை என உணர வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் உண்ணாவிரதம்

திமுகவின் நிலைப்பாடு இரட்டை வேடம். மக்களவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பேசவில்லை. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்கின்றனர். முதல்வருக்கு இண்டியா கூட்டணி ஆதரவு இல்லை. 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீட் ரத்து செய்ய என்ன முயற்சி செய்வார்கள் என பார்ப்போம். அதிமுகவிற்கு நாட்டு மக்களின் பிரச்சினை தான் முக்கியம். அதிமுகவை பொறுத்தவரை, எங்களுக்கு எஜமான்கள் தமிழ்நாட்டு மக்கள் தான்' என்று அவர் தெரிவித்தார்

SCROLL FOR NEXT