சாலையோரம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் பாய்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு 
செய்திகள்

சாலையோரம் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் புகுந்த கார்... 3 பெண்கள் உயிரிழந்த சோகம்

கே.காமராஜ்

தூத்துக்குடியில் சாலையோரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் பாய்ந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், நாலுமாவடியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக நண்பர்கள் 4 பேருடன் கார் ஒன்றில் பெங்களூருவிற்கு சென்றிருந்தார். இன்று அதிகாலை சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்த அவர்கள், தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தனர். முக்கானணி பகுதியில் சாலையோரம் பொதுக்குழாயில் பெண்கள் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் பாய்ந்தது.

பெண்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த சாலையோர தெருக்குழாய்

இந்த பயங்கர விபத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சண்முகத்தாய் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சண்முகத்தாயை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி; ஒருவர் படுகாயம்

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஆத்தூர் காவல் நிலையம்

சம்பவ இடத்திற்கு திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் உதவியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்தனர். பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், உடனடியாக அப்பகுதியில் 4 வளைவுகளுடன் கூடிய தடுப்புவேலி அமைக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைப்பதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் சோகமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT