விக்ரோலி பகுதியில் இடிந்து விழுந்த வீடு 
செய்திகள்

கனமழை : வீடு இடிந்து விழுந்து சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு!

கவிதா குமார்

மும்பையில் பெய்த கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து 10 வயது சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சமீபத்தில் கடுமையான புழுதிப் புயல் ஏற்பட்டது. அப்போது காட்கோபர் பகுதியில் விளம்பர பலகை விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பின் மும்பையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

காட்கோபர் பகுதியில் விழுந்த விளம்பர பலகை.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் விக்ரோலி பகுதியில் உள்ள கைலாஸ் வணிக பூங்கா அருகே நேற்று நள்ளிரவு திடீரென ஐந்து மாடி கட்டிடத்தின் ஸ்லாப் மற்றும் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் இடையே இரண்டு பேர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கட்டிடத்தின் அடியில் சிக்கிக் கொண்ட இருவரை உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 38 வயதான ஆண், 10 வயது சிறுவன் உயிரிழந்தனர். மும்பையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக வீடு இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஜூன் 5 -ம் தேதி, இங்குள்ள மாஹிம் பகுதியில் மாடிக்கட்டிடத்தின் பலகையின் பெரும் பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

SCROLL FOR NEXT