நடுக்கடலில் தமிழக மீனவர்கள் (கோப்பு படம்) 
செய்திகள்

மீண்டும் அத்துமீறிய இலங்கை... தமிழக மீனவர்கள் 18 பேர் கைது!

கே.காமராஜ்

கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது, மீனவர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்று இருந்தனர். இவர்கள் கச்சத்தீவு அருகே நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், இந்த மீனவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.

மீனவர்கள் கைது

பின்னர் மூன்று விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. பின்னர் இந்த மீனவர்கள் 18 பேரும் விசாரணைக்காக யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

மீன்பிடி படகுகள்

கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT