தேசம்

திருப்பதி: கஜ வாகனத்தில் வலம்வந்த ஏழுமலையான்

என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று இரவு மலையப்பர் கஜ (யானை) வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் ஆறாம் நாளான நேற்று இரவு, மலையப்ப சுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன மண்டபத்தில் தங்க யானை வாகனத்தின் மீது கம்பீரமாக வீற்றிருந்த மலையப்பர், நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வாகன சேவையில் யானை, குதிரை, காளை உள்ளிட்ட பரிவாரங்களும் இடம்பெற்றன. ஜீயர் குழுவினரும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட திரளான பக்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று மாலை, பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த மலையப்பரின் தங்கரத பவனியும் திருமலையில் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மலையப்பரை தரிசித்தனர்.

SCROLL FOR NEXT