தேசம்

`உறவுக்கார பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்ததால் கொன்றோம்'- சரணடைந்த சிறுவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

காமதேனு

கடந்த ஆண்டு திசையன்விளை அருகே நடந்த கொலையில் குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், சிறுவர்கள் 3 பேர் சரணடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செல்வமருதூரை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரன்(22) என்பவர் காணாமல் போனதாக அவரது தாயார் சுமதி 09.10.2022-ம் தேதி திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், திசையன்விளை கிராம நிர்வாக அலுவலரிடம் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் இன்று சரணடைந்தனர். அப்போது, ராஜேந்திரனை கொலை செய்து அரசூர் பகுதியில் புதைத்துள்ளோம் என கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர், 3 சிறுவர்களையும் திசையன்விளை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன், சிறுவர்களின் ஒருவரின் உறவினர் பெண்ணை ஆபாசமாக செல்போனில் போட்டோ எடுத்து வைத்துள்ளதாகவும், அதனை தட்டிகேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை அரசூர் பகுதியில் புதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 3 சிறுவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT