இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்வதற்காக ரயில் முன்பு நடந்து வீடியோவிற்கு போஸ் கொடுத்த இளைஞர் மீது ரயில் மோதியது. படுகாயங்களுடன் அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலங்கானா மாநிலம், வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ்( 17 ). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ பதிவேற்றம் செய்து ஆக்டிவாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஓடும் ரயில் முன்பாக ஹீரோயிசம் காட்டும் வகையில் நடந்து வீடியோவிற்கு போஸ் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் அங்கேயே அந்த இளைஞர் சுருண்டு விழுந்துள்ளார். ரத்த காயங்களுடன் கிடந்த அந்த இளைஞரை ரயில்வே போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்குக் கால் எலும்பு முறிவும், முகத்தில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், “அக்ஷய் தனது இரண்டு நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ எடுக்க பல்ஹர்ஷாவில் இருந்து வாரங்கல் செல்லும் ரயில் செல்லும் பாதையில் நின்று உள்ளார். அப்போது வேகமாகச் சென்ற ரயில் தலையில் ரயில் மோதி உள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.