தேசம்

தீபாவளிக்காக காத்திருந்த மகன்; தந்தையை கொன்றவர் கொடூரமாக கொலை: பழிக்குப்பழியால் நடந்த பயங்கரம்

காமதேனு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் தன் தந்தையை கொலை செய்த கூலித் தொழிலாளியை, அவரது மகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில் உள்ளது அர்ச்சனாபுரம். இங்குள்ள மாரியப்பன்(52) என்பவர் கடந்த மார்ச் 9-ம் தேதி, அதே ஊரைச் சேர்ந்த முருகன்(36) என்னும் கூலித் தொழிலாளியால் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் சிறையில் இருந்தார். தொடர்ந்து ஜாமீனில் வந்தவர் கேரளத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் தன் சொந்த ஊருக்கு வந்திருந்தார் முருகன்.

வத்திராயிருப்பில் இருந்து, அர்ச்சனாபுரம் நோக்கி நேற்று மாலை தனது உறவினர் பாண்டியன் என்பவருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முருகனால் கொலை செய்யப்பட்ட மாரியப்பனின் மகன் ரஞ்சித் குமார்(24), அவரது நண்பர்கள் மாரியப்பன், பால்பாண்டி, முத்துகுமார், சூர்யா, முத்து ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முருகனை வழிமறித்து வம்பு இழுத்தனர். அப்போது ரஞ்சித் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார். தொடந்து 6 பேரும் தலைமறைவாகினர். இதுகுறித்து முருகனின் உறவினர் பாண்டியன் கொடுத்த தகவலின்பேரில் வத்திராயிருப்பு போலீஸார் ரஞ்சித்குமாரைக் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களையும் தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT