நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 44 வயதுள்ள நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சையது லியாகத்(46). கூலித் தொழிலாளியான இவர், கடந்த சில தினங்களுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமியுடன் வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சையது லியாகத் தனது வீட்டிற்குள் அழைத்துச்சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் சையது லியாகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி போலீஸார், சையது லியாகத்தை விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து காவல் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய போலீஸார் சையது லியாகத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.