அப்துல் ரஷீத்
அப்துல் ரஷீத் 
தேசம்

நகையை திருடி ஆன்லைன் விளையாட்டு... கொள்ளை போனதாக புதுமாப்பிள்ளை நாடகம்: மனைவி புகாரால் அம்பலமானது `குட்டு'

காமதேனு

மனைவி நகையைத் திருடி விற்றுவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடிய புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நகை விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது விசாரணையில் அம்பலமானது.

சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத்(28). இவர் துபாயில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த அப்துல்ரஷீத்க்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி மாலை அப்துல் ரஷீத் தனது மனைவியுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த மனைவி பாத்திமாவின் (பெயர் மாற்றம்) 17 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உறவினர் முகம்மது சாயி

மேலும் அவர் வீட்டு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அப்துல் ரஷீத் அவரது மனைவி வருவதற்கு முன் வீட்டிற்குள் சென்று வருவது பதிவாகி இருந்தது. சந்தேகமடைந்து போலீஸார் அப்துல்ரஷீத்தை விசாரித்தபோது, அவரே தனது மனைவியின் நகையைத் திருடி விற்று விட்டு கொள்ளை போனதாக நாடகம் ஆடியது அம்பலமானது. மேலும், துபாயில் இருந்து வந்த பின் வேலைக்கு எதுவும் செல்லாமல், வீட்டில் வேலைக்குச் செல்வது போல் உணவைக் கட்டிக்கொண்டு மெரினாவிற்குச் சென்று பொழுதைப் போக்கிவிட்டு மாலை வீட்டுக்கு வந்து மனைவியை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், நண்பர்கள் பலர் புல்லட் வைத்திருந்ததால், தானும் புல்லட் வாங்க ஆசைப்பட்டு நகையைத் திருடிய அப்துல் ரஷீத் நகை விற்று வந்த பணத்தில் புல்லட் வாங்காமல் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி 2.50 லட்சத்தை ஆன்லைன் ரம்மியில் தோற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சொந்த வீட்டில் நகையைத் திருடி கொள்ளை நாடகமாடிய அப்துல் ரஷீத் மற்றும் அவருக்கு நகையை விற்று பணம் வாங்கி கொடுத்த அவரது உறவினர் முகம்மது சாயி ஆகிய இருவரையும் எழும்பூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT