தேசம்

`சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா?'- உயர் நீதிமன்றம் கேள்வி

காமதேனு

சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை வீரன் உண்மை வரலாறு புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகங்கள் ஆட்சேபணைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக இருப்பதோடு, பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் ஜாதியவாதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதாகவும் இருப்பதாக கூறி, இந்தப் புத்தகங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல புத்தகங்களை எழுதியுள்ளதாகவும், தான் ஒரு சமூக ஆர்வலர் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டது என்றும் சாதி ரீதியாக எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த புத்தகம் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்ற புத்தகம் என்றும் தன்னிடம் உரிய விளக்கம் கேட்கப்படாமல் இந்த புத்தகம் தடைவிதிக்கப்பட்டதாகவும் எனவே இந்த தடையை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி 2000 புத்தகங்கள் விற்பனையாகி விட்டது என்றும் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கு தடை விதிக்க முடியாது என்றும் வாதிட்டார். ஏற்கெனவே பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் சமர்ப்பித்தார். வழக்கை விசாரித்த அந்த உத்தரவின்படி இதுபோன்ற புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் அதுபோல் ஏதாவது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அந்த குழுவில் யாரெல்லாம் நிபுணர்கள் உள்ளார்கள் என்பது குறித்து அறிக்கை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 29-ம் தேதி ஒத்திவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT