உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், தரையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நோயாளியின் ரத்தத்தை நாய் ஒன்று நக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டில் எடுக்கப்பட்டு வைரலான வீடியோவில், யாரும் இல்லாத நிலையில் ஒரு நோயாளி தரையில் மயங்கிக் கிடக்கும்போது, ஒரு நாய் உள்ளே புகுந்து அவரின் அருகே சிந்தியுள்ள இரத்தத்தை நக்குவதைக் காட்டும் அதிர்ச்சி வீடியோ வெளியானது. இது தொடர்பாக பேசிய தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சதேந்திர குமார் வர்மா, "இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரண்டு வார்டுபாய்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நோயாளியை அரசு ஆம்புலன்ஸ் சேவை இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது. அவருக்கு தலையில் பலத்த காயம் இருந்தது. அவருக்கு ஒரு படுக்கை வழங்கப்பட்டது. பின்னர் மூன்று நான்கு நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்ததால், மருத்துவரும் மருந்தாளரும் அவர்களை பார்க்கச் சென்றுவிட்டனர். இந்த நேரத்தில்தான் நாய் வார்டுக்குள் நுழைந்துள்ளது.
செவ்வாய்கிழமை இரவு படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் உள்ள நோயாளி, குஷிநகரின் ஜாதா பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் பிட்டு (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “அவர் சாலை விபத்தில் சிக்கிய பிறகு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவர் சுயநினைவின்றி இருப்பதால், விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.