திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் அரசு பேருந்து மோதி கூலித்தொழிலாளர்கள் இருவர் உயிர் இழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ளது கன்னங்குளம். இப்பகுதியைச் சேர்ந்த முருகன்(70), நாகமல்(66) இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று இரவு இவர்கள் இருவரும் மன்னார்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் தங்கள் டூவீலருக்கு பெட்ரோல் போட வந்தனர். டூவீலரை முருகன் ஓட்டிவந்தார். பெட்ரோல் பங்க் அருகே சாலையில் திரும்பிய போது பின்னால் இருந்து வந்த அரசு பேருந்து இவர்களின் டூவீலர் மீது மோதியது.
இதில் முருகன், நாகமல் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். அப்பகுதிவாசிகள் இருவரையும் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிர் இழந்தார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாகமல் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், நள்ளிரவில் அவரும் சிகிச்சை பலனின்றி அவரும் உயிர் இழந்தார். சாலை விபத்தில் கூலித் தொழிலாளிகள் இருவர் உயிர் இழந்தது அப்பகுதிவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியது.