பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் 
தேசம்

`எனக்கு எதுவும் தெரியாது, அவருக்குத்தான் எல்லாம் தெரியும்'- போலீஸை ஏமாற்ற முயன்ற 2 பேர் சிக்கினர்

காமதேனு

சீர்காழி பகுதியில் தொடர்ந்து  இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த நபரையும், அவருக்கு  உடந்தையாக செயல்பட்ட சிறுவனையும்  கைது செய்துள்ள போலீஸார்  அவர்களிடமிருந்து 10 லட்சம் மதிப்பிலான 7 வாகனங்களை மீட்டனர்.

ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான சீர்காழி  போலீஸார் வழக்கம்போல் நேற்று சீர்காழி புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஒரு சிறுவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தனர். அவனை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் தகவல்களை தெரிவித்தார். தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்ன அந்த சிறுவன் எல்லாம் அவருக்குத்தான் தெரியும் என்று அவனுக்கு சற்று இடைவெளி விட்டு வேறொரு இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு நபரை சுட்டிக்காட்டினான்.

அதையடுத்து அவரையும் தடுத்து நிறுத்திய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுவனும் அவரும் வந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அதனை அடுத்து இருவரையும் சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில் தான் இருசக்கர வாகனம் திருடுபவர், அந்த சிறுவன் தனக்கு உதவியாக இருப்பான் என்பதை ஒப்புக்கொண்டனர். அந்த நபர் சீர்காழி பிடாரி கீழ வீதி பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகன் கோகுல்( எ) கோகுலகிருஷ்ணன் (22) என்பது தெரிய வந்தது.

மயிலாடுதுறை, சீர்காழி, சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், போன்ற பல்வேறு பகுதிகளில்  அவர்கள் இருசக்கர வாகனங்களை திருடி அதை வேறு ஊர்களில் கொண்டு சென்று விற்று வந்துள்ளனர். மேலும் அவர் திருடி மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த 7, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT