தேசம்

தடம் மாறிய அரசு பேருந்து டூவீலரில் மோதியது: சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்த இளைஞர்கள்

காமதேனு

புதுக்கோட்டை நகரில் இரவு நடந்த சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியைச் சீனிவாசன் (29) என்பவர் மேல நான்காம் வீதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (27) என்பவரோடு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர்களது இருசக்கர வாகனம் நகர காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து எப்போதும் செல்லும் வழியாக செல்லாமல் நகர காவல் நிலையம் வழியாக ‌தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வழியாக பேருந்து வந்ததை எதிர்பாராத இளைஞர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில் அவர்கள் மீது பேருந்து பலமாக மோதியது.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT